News Updates in Tamil (29.3.2026)
Irumbu Thirai News
March 30, 2026
(29.3.2026 வெளியான இலங்கை தொடர்பான செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்)
நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக காயங்களுக்கு உள்ளானதாலும், அவர்களின் மோசமான ஆட்டத்திறன் காரணமாகவும், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டு அமைச்சு இணைந்து வீரர்களுக்காகப் புதிய உடற்தகுதிப் பரிசோதனை முறையைத் தொடங்கியது. இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற 46 வீரர்களில் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க நாளை (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" தேசிய திட்டம் இன்று (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே "சுரகிமு லங்கா" திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்தத் திட்டம் இன்றிலிருந்து அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்ல 'சுஹுருபாய' தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு ஒருநாள் சேவையின் கீழ் வருகை தந்து, தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம், நாளை (30) ஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் எனத் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரிசியைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது நேற்று (28) 635 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை விட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக இருந்தால், அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது
இலங்கையின் அனர்த்த அபாய முகாமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தும் நோக்கில், “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) எனும் விசேட பயிற்சிநெறி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாக அறவிடும் பேருந்துகள் அல்லது கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்தாத பேருந்துகள் குறித்து பொதுமக்கள் பின்வரும் இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி: 011 2860860
வட்ஸ்அப்: 070 2860860
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC):
அவசர இலக்கம்: 1955
வட்ஸ்அப்: 071 2595555
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், தற்போதைக்கு நீர்க் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
-- x --
News Updates in Tamil (29.3.2026)
Reviewed by Irumbu Thirai News
on
March 30, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 30, 2026
Rating:

.jpeg)




.jpeg)

.jpeg)
.jpeg)











