அரசியல் அரங்கில் திரைக்கு அப்பால்.....



அரசியலமைப்பு திருத்தம்.... 
2015 அம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு விரைவாக அரசியலமைப்பின் 19ஆம் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய பா.உ தற்போதைய இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். 
2018 ஆம் ஆண்டு அக்டோபர் இல் இடம்பெற்ற ஆட்சி மாற்ற முயற்சி தோல்வியடைந்தமையை தொடர்ந்து நாட்டில் 19 ஆவது சீர்திருத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட ஆரம்பித்தது தற்போதைய ஆளும் தரப்பு. தொடர்ந்து அதை வலுவான ஒரு அரசியல் கருப்பொருளாக மாற்றி எடுத்து தனது தேர்தல் வெற்றிக்கான ஒரு காரணியாகவும் மாற்றியது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே 19 ஐ மாற்றும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதன் தொடர்ச்சியாக 19 ஐ பூரணமாக நீக்காமல் 20ஆம் திருத்தத்தை அரசு முன்மொழிந்துள்ளது. கடந்த வார அரசியலில் முக்கிய செய்தி அதுவே. 
 20 ஆவது திருத்தம் கடந்த புதன் கிழமை நீதியமைச்சர் அலி சப்ரி அவர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் சட்டமா அதிபரின் பரிந்துரையும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், குறித்த திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
#19 ல் நான்கு விடயங்கள் எஞ்சுகின்றன# 
உத்தேச 20ஆம் திருத்தம் 19 ஆம் திருத்தம் மூலம் திருத்தம் செய்யப்பட்ட 4 விடயங்களை அவ்வாறே இருக்க ஏனைய எல்லா விடயங்களையும் இல்லாமல் செய்கிறது. பாராளுமன்ற ஆயுட்காலம், ஜனாதிபதியின் ஆயுட்காலம், தகவல் அறிதல் அடிப்படை உரிமை, ஜனாதிபதி ஒருவர் பதவி வகிக்கக் கூடிய தடவைகள் ஆகிய நான்குமே அவையாகும். சட்ட மூலம் குறித்த கருத்தாடல்களின் பின்னர் அதனை வர்த்தமானியின் வெளியிடுமாறு ஜனாதிபதி நீதியமைச்சரை பணித்தார். 
#பந்துல கொண்டு வந்த விஷேட பொருள்# 
கடந்த புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பந்துல குணவர்தன அபூர்வமான பொருள் ஒன்றை கொண்டு வந்தார். அது சூரிய சக்தியால் இயங்கும் பேட்டரி ஒன்றாகும். 

தான் கல்வியமைச்சராக இருக்கும் போது நனோ தொழில்நுட்ப நிறுவனத்தால் அதன் உருவாக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 100% சுதேச மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்களை அறிவுறுத்தினார் பந்துல. 
 மீண்டும் விமான நிலையங்களை திறப்பது குறித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்தார். 
 #மாகாண சபை அமைச்சருக்கு மாகாண மட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு. # 
உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சரத் விரசேகர. அவர் மாகாண சபைகளுக்கு கடும் எதிர்பானவர். அதற்கு எதிராக பகிரங்கமாக செயற்படுபவர். அவர் அமைச்சரான பின்னர் கூட அதற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு ஆளும் தரப்பை சேர்ந்த மாகாண மட்ட தலைவர்கள் இணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் இணைந்து கடந்த புதன்கிழமை பத்தரமுல்லயில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினர். இவர்களில் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவரான சப்ரகமுவ மாகாண சபைத் தலைவர், முன்னாள் மாகாண முதலமைச்சர் போன்றோர் மிக முக்கியமானவர்கள். 
#சரித் வீட்டு விருந்து# 
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித் ஹேரத் அவர்களின் புதுமனை புகு நிகழ்வும் விருந்தும் கடந்த வாரம் நடைபெற்றது. பிரதமர், பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, சுரேன் ராகவன் போன்ற பலர் அதில் பங்குபற்றினர். பிரதமர் 7.30 க்கு வந்து சுமார் அரைமணி நேரம் இருந்து விட்டு சென்ற போதிலும் சற்று தாமதமாக வந்த பசில் ராஜபக்ஷ நீண்ட நேரம் தரித்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். 
#சிங்கராஜ வீதி# 
கடந்த சில நாட்களாக அரசியல் அரங்கில் பரவலாக பேசப்பட்ட விடயம் சிங்கராஜ வனத்தை ஊடறுத்து போடப்படும் வீதி பற்றியது. அது தொடர்பில் நேரடியாக ஆராய ஜனாதிபதி அங்கே விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வனத்தினுள் காணப்படும் லங்காகம கிராமத்திற்கான பிரவேசப் பாதையே அது என்றும் அதன் மூலம் சுற்றாடல் பாதிப்புக்கள் இல்லையென்றும் அங்கே ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் லங்காகம மக்களுடன் கலந்துரையாடவும் ஜனாதிபதி தவறவில்லை. 
#ஐதேக தலைமைப் போட்டியில் விஜேவர்த்தன.# 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் போட்டிக்கு முன்வந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்த்தன கடந்த வாரம் கண்டிக்கு விஜயம் செய்து அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் முக்கிய தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கட்சியின் தலைமைக்கு மிகப் பொருத்தமான நபர் அவரே என்றும் அவருக்கு தமது பூரண ஆதரவு உள்ளது என்றும் தேரர்கள் தெரிவித்தனர். 
"பெளத்த பாரம்பரியம் மிக்க, ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் அற்ற ருவன் தலைமைக்கு பொருத்தமானவர்" என்று அஸ்கிரி விகாரையின் பிரதி செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார். மேலும் அஸ்கிரி பீடத்தின் துணை நாயக்க தேரர் வெண்டருவ உபாலி தேரர் 220 வருடங்கள் பழமை வாய்ந்த கெடிகே விகாரைக்கும் அழைத்து சென்றதுடன், தனது துறவு வாழ்க்கைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு வெளியிடப்பட்ட "கல் பிளிமய" புத்தகத்தின் பிரதி ஒன்றையும் வழங்கி வைத்தார். 
 #சஜித் இன் நன்றி நவிலல் கூட்டத் தொடர்.# 
பாராளுமன்றம் கூடி அதன் கூட்டத்தொடர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் பங்குபற்றிக் கொண்டே, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களையும் நடாத்தி வருகிறார் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச. 
கடந்த வாரம் அவ்வாறான கூட்டம் ஒன்று கொலன்னாவையில் நடந்தது. தாம் அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யப் போவதில்லை என்றும், அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு அவகாசம் வழங்குவோம் என்றும் சஜித் அங்கே குறிப்பிட்டார். 
அதே கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் S. M. மரிக்கார் அரசு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியே தேர்தலை வென்றது. தற்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும். எனினும், அவற்றை நிறைவேற்றும் நோக்கம் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவற்றை நிறைவேற்ற நாம் அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார். 
#ஹரினுக்கு பொறுப்பு# 
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவரான ஹரின் பெர்னாண்டோவை கட்சி தலைமையகத்தில் சந்தித்த தலைவர் சஜித் கிராமிய மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக கொண்ட அவர் அது தொடர்பில் தன்னிடம் சிறந்த திட்டம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
MT New Diamond...  
கடந்த வார இறுதியான போது இலங்கை கடற் பரப்பில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல் பற்றிய செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. இக்கப்பலில் உள்ள தீயை அணைக்க முடியாமல் வெடிப்பு ஏற்பட்டால் உலகில் மிகப் பெரிய எண்ணெய்க் கப்பல் விபத்தாக அமைந்து பாரிய சுற்றாடல், பொருளாதார அழிவுகளை கொண்டு வரலாம். அதன் அரசியல் பரிணாமம் எதிர்வரும் வாரங்களில் அரசியல் அரங்கில் சூடு பிடிக்கலாம். 
அவ்வாறே 20 ம் திருத்தம் பற்றிய அரசியல் வாத விவாதங்கள் அடுத்து வரும் வாரங்களில் அரசியல் அரங்கை ஆக்கிரமிக்க உள்ளன. ஐதேக தலைமைச் சண்டை, உட்பட பல விடயங்களுடன் எதிர்வரும் வாரம் மீண்டும் சந்திப்போம். 
 - fபயாஸ் MA fபரீட்.
அரசியல் அரங்கில் திரைக்கு அப்பால்..... அரசியல் அரங்கில் திரைக்கு அப்பால்..... Reviewed by irumbuthirai on September 09, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.