திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 7ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. நாடு பூராகவும் 2,936 மத்திய நிலையங்கள். 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றினர். சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள். இதற்கு மேலதிகமாக இம்முறை Covid-19 ற்கு சிகிச்சை அளிக்கப்படும் IDH வைத்தியசாலையிலும் 5 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 
  • களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு கொரோனா தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக நேற்றைய (10) தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கபட்டுள்ளது. பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டிருந்தது. குறித்த இருவரும் பழகிய தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்களின் பிசிஆர் பரிசோதனைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

  • அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (11) நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • பொதுமக்களுக்கு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு - தொலைபேசி- 0114354550 / 0112354550 தொலைநகல்- 011 2348855 ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் - 0112338073 ஜனாதிபதி நிதியம் - 0112354354 (4800 / 4814 / 4815 / 4818) தொலைநகல்- 011 2331243 
  • வவுனியா, சிறீபாத மற்றும் மகரகம தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதற்காக ராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டது. 
  • மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட தாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம். அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து குறித்த மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களினுள் முதலில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஶ்ரீதரன் மேலும் தெரிவிப்பு. 
  • கொவிட் தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும், அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப் படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த பிரதேசங்களில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 
  • இன்று (11) இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் புதிதாக மூன்று வைத்தியர்களும் அடங்குவர் என Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு. மாவனல்லை பிரதேசத்தில் இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். இவர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியோடு (Cluster) தொடர்புபட்டவர்கள் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவிப்பு. ஏற்கனவே கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • இன்றைய தினம் மொத்த தொற்றாளர்கள் 124 ஆகும். இதில் 121 பேர் மினுவாங்கொட தொழிற்சாலையோடு சம்பந்தப்பட்டவர்கள். 3 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 4750 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.