பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர்



பாடசாலை கல்வி முறைமை, தொழிற்கல்வி வழங்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள். ஆசிரியர் இடமாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இது தொடர்பான விடயங்களை தெரிவித்தார். 

அவர் இவை தொடர்பில் தெரிவிக்கையில்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வித் துறையின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தி வருகிறார்.

கல்வித் துறையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவீன உலகுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு, எமது மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.  அதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலைத்துறை, கணிதவியல் உள்ளிட்ட பாட விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் “STEAM” என்ற தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கவும் மேலும் இரண்டாம் மொழி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சுமார் 8000 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் 5500 பட்டதாரிகள், ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள். 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

மேலும், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.. 

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை மாணவர்கள் தமது நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆங்கிலம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பாடநெறிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Source: news.lk



Previous:

பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பாடசாலை கல்வி முறைமை, தொழிற் கல்வி, ஆசிரியர் பற்றாக்குறைக்கான தீர்வு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on August 24, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.