அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு:

November 22, 2020

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசியல் களத்தில் Top Ten List இல் முதலில் இருந்த கொரோனா விவாகாரம் இவ்வாரம் கொஞ்சம் சறுக்கியிருந்தது. 
கடந்த தொடரின் இறுதியில் நாம் குறிப்பிட்டிருந்தது போல வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் கொரோனா விவகாரத்தை தள்ளி முக்கிய செய்திகளாக இடம் பிடித்தன. 

 #முப்பெரும் விழா கொண்டாடிய அரசு
கடந்த வாரம் அரசுக்கு மிக முக்கியமான வாரமாக அமைந்தது. மூன்று முக்கிய நிகழ்வுகள் இதற்கு காரணமாக அமைந்தன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து ஒரு வருடம் பூர்த்தியாதல், SLPP அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75 ஆவது பிறந்த தினம் என்பனவே அம்மூன்று விடயங்களுமாகும். 

#அனுராதபுரத்தில் ஜனாதிபதியும் பிரதமரும்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொண்டாட்டங்கள் எதுவும் இல்லாமல் மத நிகழ்வுகள் மாத்திரம் நடைபெற்றன. இதற்கென ஜனாதிபதி, பிரதமர் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை அனுராதபுரத்தில் தங்கினர். 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலும், பிரதமர் மஹிந்த வணிகரான முதித குணசேகரவின் வீட்டிலும் தங்கினர். 
பிரதமர் மஹிந்தவை சந்திக்க மாவட்டத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தந்ததுடன், ஜனாதிபதியை சந்திக்க யாருமே செல்லவில்லை. 
அடுத்த நாள் இவர்கள் இருவரும் தனித்தனியாக மத சடங்குகளில் ஈடுபட்டனர். மஹிந்த முதலில் புனித வெள்ளரசு மரத்தை தரிசிக்க சென்றார். அவருடன் மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதிகளான SM சந்திரசேன, துமிந்த, ஷெஹான், ஆகிய அமைச்சர்களோடு, முன்னாள் வடமேல் மாகாண முதல்வர் SM ரஞ்சித் உம் இணைந்து கொண்டனர். 
 அதனைத் தொடர்ந்து அங்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பாரியாருடன் மாத்திரம் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அனுராதபுரத்தில் உள்ள 8 தலங்களுக்கும் ( அட்டமஸ்தான) இவர்கள் வெவ்வேறாகவே சென்ற போதிலும் மிரிசவெடிய விகாரையில் நடைபெற்ற பூஜையில் இணைந்து கலந்து கொண்டனர். 

 #இவ்வார அமைச்சரவைக் கூட்டம்
இவ்வார அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி 9 மணி வரை நீண்டு சென்றது. அதிகமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை இவ்வார கூட்டம் மிக நீண்டு செல்ல காரணமாக அமைந்தது. 

** மீண்டும் சூடு பிடித்த முஸ்லீம் ஜனாஸா விவகாரம்** 
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் கோவிட் 19 காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்ற தகவல் பரவி பாரிய சர்ச்சைகளை உருவாக்கி இருந்தது. 
இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவசங்ச இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி முக நூலில் இட்டிருந்த பதிவு ஒன்றே காரணமாக அமைந்ததாக குற்றம் சாட்டினார். 
அதனை மறுத்த அலி சப்ரி தான் அவ்வாறு எந்த பதிவையும் இடவில்லை என்றும், முடிந்தால் தான் இட்ட அவ்வாறான பதிவு ஒன்றைக் காட்டுமாறும் அமைச்சர் விமல்க்கு சவால் விடுத்தார். 

 **டக்ளஸ், விமல் இன் ஆயுதங்களுக்கு ஏற்பட்ட சோதனை
ஆயுதங்கள் தொடர்பான ஒரு தொல்பொருள் காட்சிச்சாலையை உருவாக்குவதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை பிரதமர் சமர்ப்பித்திருந்தார். 
இலங்கையின் பாரம்பரிய ஆயுதங்கள், சம்பிரதாயப்பூர்வமாக பரம்பரை பரம்பரையாக வீடுகளில் உள்ள ஆயுதங்களை திரட்டி இதனை பிரதமர் முன் மொழிந்தார். இதன் மூலம் இவற்றை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார். அதன் போது அமைச்சர் விமல் வீரவங்ச "அப்படியென்றால் அதில் டக்ளஸ் தேவானந்தா பயன்படுத்திய ஆயுதங்களையும் வைக்கலாம்" எனக் கூற குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே "ஏன் டக்லஸ் இனுடையது மட்டுமே. விமல் பயன்படுத்தியதைக் கூட வைக்கலாமே" என்று குறிப்பிட்ட ஒட்டு மொத்த அமைச்சரவையும் சிரிப்பலையால் நிறைந்தது. 

**சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு பதிலளிக்க தயாராகும் அரசு** 
சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் சுமார் ஒரு மணித்தியாலம் அளவில் கலந்துரையாடப்பட்டது. 
அரசுக்கு எதிரான சில சக்திகள் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு சேறு பூசி வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்தார். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செய்ய முடியுமான சகலதையும் செய்திருக்கும் நிலையில் கோவிட் பாதிப்பினால் மக்கள் வீதிகளில் இறந்து விழுவது போன்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் உட்பட அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 
இறுதியாக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 

#நிதியமைச்சர் மஹிந்தவின் சாதனை
கடந்த 17 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச. இது அவர் சமர்ப்பிக்கும் 11 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதற்கு முன்னர் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருந்ததே சாதனையாக இருந்தது. இதனை மஹிந்த சமப்படுத்தினார். 
அத்துடன் இம்முறை மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது இலங்கையின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். இதனை சமர்ப்பித்த மறுநாள் சமர்ப்பித்தவரின் 75 ஆவது பிறந்த தினம் வந்தமை விதியின் விளையாட்டு என்று அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார். 
 #வரவு செலவுத் திட்ட உரை
வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக பிரதமர் பி.ப 1 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். சபை முதல்வர் தினேஷ், ஆளும் கட்சி பிரதம கொரடா ஜோன்ஸ்டன் ஆகியோர் அவரை வரவேற்றனர். 
உரை ஆரம்பம் செய்வதற்கான சுப வேளை பி.ப 1.40 க்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமையால் பிரதமர் நேரடியாக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் சென்றார். அங்கே நிதியமைச்சின் செயலாளர் ஆடிகல மற்றும் சில அமைச்சர்களோடு கலந்துரையாடினார். சரியாக 1.40 க்கு பிரதமர் உரையாற்ற ஆரம்பித்தார். இந்த உரை சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் அளவுக்கு நீண்டு சென்றது. 
 வழக்கமாக உரையின் பின்னால் நிதியமைச்சர் வழங்கும் தேநீர் விருந்துபசாரம் இம்முறையை உரையின் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இதில் பரவலான பங்குபற்றல் இடம்பெறவில்லை. சுமார் 10 வருடங்களாக இந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்குபற்றாமல் இருந்த அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இம்முறை தனது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் உடன் வந்து கலந்து கொண்டார். 

 #பிறந்த நாள் கொண்டாட்டம்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் இவ்வாரம் கொண்டாடப்பட்டன. இவர்களில் பிரதமரின் பிறந்த தினம் மிக முக்கியமானதாக இருந்தது. பிரதமரின் 75 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அபயாராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் ஏற்பாடு செய்திருந்த பாட்டிமாருக்கான தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று அபயாராமவில் நடைபெற்றது. 
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்க சென்ற பிரதமருக்கு SLPJP இன் மொட்டு சின்ன வடிவில் பிறந்தநாள் கேக் தயாரித்து வழங்கி அசத்தினார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. கேக் வெட்டிய மஹிந்த முதல் துண்டை பிரசன்னவுக்கு வழங்கி மகிழ்ந்தார். 
 இது தவிர ஆளும் கட்சி உறுப்பினர்களான பிரேம்நாத் தொளவத்த, வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரின் பிறந்த தினங்களும் இந்த வாரத்தில் கொண்டாடப்பட்டன. பாராளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினர் உறுப்பினர்கள். 
அரசியலமைப்பின் 20 ஆவது சீர்திருத்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவளித்த அரவிந்த் குமார் இன் பிறந்த தினமும் இவ்வாரம் வந்திருந்தது. இவ்வாரம் இடம் பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் கூட்டத்தில் அவர் முதல் முறையாக கலந்து கொண்டார். அங்கே அவருக்கு ஒரு பிறந்தநாள் கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கண்டு மிகவும் நெகிழ்ந்து போனார். பல ஆண்டுகள் நான் எதிர்க்கட்சியின் இருந்தேன். ஆனால் எனக்கு இவ்வாறான ஒரு வரவேற்பு கிடைக்கவில்லை. காலையில் பிரதமர் நேரடியாக என்னை வாழ்த்தினார். நான் அடைந்த மிகச்சிறந்த பிறந்தநாள் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் அரவிந்த குமார். 

 #சஜித் ஐ சந்திக்க வந்த விருந்தினர்
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வருகை தரும் போது அவரை சந்திக்க ஒரு விருந்தாளி காத்திருந்தார். 
அவர் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐதேக சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய. சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் அவர் வருகை தந்திருந்தார். அவருடன் சுமார் அரை மணிநேரம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றத்துடன், SJB இன் புத்திஜீவிகள் ஒன்றியத்துடன் இணைந்து கொள்ள முன்வருமாறு சஜித் வேண்டிக் கொண்டார். அதன் பின்னர் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவோடும் கிரிஷ்மால் கலந்துரையாடினார். 

 #குறைகேள் எதிர்க்கட்சி
கிரிஷ்மாலுடன் கலந்துரையாடிய சஜித் நேரடியாக சென்றது தொலைபேசி அழைப்பு நிலையத்திற்காகும். கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளமை குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு எதிர்பாராத மக்கள் வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக ஹரீன், மனுஷ, மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் போன்றோர் தொடர்ந்து மக்களின் குறைகளைக் கேட்டு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் குறைகளை பாராளுமன்ற உறுப்பினர்களே நேரடியாக கேட்டு பதிவு செய்து வருகின்றனர். 
கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த சஜித் இந்த செயற்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். நீண்ட நேரம் மக்கள் குறைகளை கேட்டு பதிவு செய்த அவர் "இவ்வாறு பதிவு செய்யும் விடயங்கள் ஒரிஜினல் ஐ இங்கே வைத்துக் கொண்டு பிரதி ஒன்றை எனக்கு தாருங்கள். வண்டியில் செல்லும் போது வாசித்து அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்" எனத் தெரிவித்தார். 
"பாராளுமன்ற கூட்டம் உள்ளது. இல்லையென்றால் நாள் முழுவதும் இருந்து பொது மக்களின் குறைகளைக் கேட்டிருப்பேன்" என்று சொன்ன எதிர்க்கட்சி தலைவர் சஜித், குறித்த செயற்பாடு இடம்பெறும் பொறிமுறை தொடர்பிலும் ஹரீனிடம் விபரங்களை கேட்டறிந்தார். "நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவர் இங்கே வருகிறோம். மக்களின் குறைகளை கேட்கிறோம். அவற்றை பதிவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி வைத்துள்ளோம். அதன் பின்னர் உரிய தரப்பிற்கு அவற்றை வழங்கி தீர்வினை வழங்க தேவையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றோம்" என ஹரீன் விளக்கினார். 
 "இந்த வேலை அரசுக்கு மிகுத்த பாதிப்பை உருவாக்கியுள்ளது. இன்று நாம் மக்களின் குறைகேள் அதிகாரிகளாகியுள்ளோம்."என்று சஜித் கூறினார். 

 #பச்சை மீன் சாப்பிட்ட திலீப்
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தனியைத் தொடர்ந்து இலங்கையின் மீன் விற்பனை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் சிறிய, பெரியாளவிலான மீன் வியாபாரிகளின் ஜீவனோபாயம் கேள்விக்குறியாகி உள்ளது. இன்னமும் மக்கள் மீன் கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். 
இந்நிலையில் மீனவர்களுக்காக துணிந்து குரல் கொடுத்தால் SJB பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி. "மீன் சாப்பிடுவதன் மூலம் கொரோனா பரவும் என்று சிலபேர் தகவல் பரப்பி வருகின்றனர். உண்மையில் அது பொய். அதனை நிரூபிக்க நான் பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டுகிறேன் என்று தெரிவித்த திலீப் தான் கொண்டு வந்திருந்த மீனின் ஒரு பகுதியை பச்சையாக உண்டு காட்டினார். இவ்விடயம் ஊடகங்களில் வெளியானது. சிலர் இதனை மோசமான செயலாக கூறினார். 
 இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் "உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் மீனவ சமூகம் மிக சிக்கலான நிலைமையில் உள்ளது. அரசு அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இவ்வாறான நிலையில் அவர்களுக்காக பேச நீங்கள் முன் வந்துள்ளீர்கள்" என்றார். 
"பச்சையாக மீன்களை உண்ணும் வழக்கம் ஜப்பான் உட்பட கீழைத்தேய நாடுகளில் உள்ளது. இது தெரியாத சிலர் இதனை விமர்சனம் செய்கின்றனர்." என மனுஷ எம்பி கூறினார். 
"திலீப் பயமில்லாமல் செய்த இவ்விடயம் மிகப்பெரிய ஒரு விடயம். அரசு செய்ய வேண்டிய வேலையை நாம் செய்துள்ளோம். இது பையாக்களுக்கு (மொட்டு கட்சியினரை குறிக்க பயன்படும் சொல்) நகைச்சுவையாக இருந்தாலும் சர்வதேச ஊடகங்களில் நல்ல விதமாக எடுத்துக் கொள்வார்கள்" என்று எதிர்வு கூறினார் ஹரீன். அவர் சொன்னவாறே சர்வதேச ஊடகங்கள் பல இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. 

#ஊடகவியலாளர்களுக்காக குரல் கொடுத்த சஜித்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பாரிய வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்றில் தெரிவித்தார் சஜித். 
"இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ளது. அரசின் தோல்வி ஒவ்வொரு நொடியும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தம்மை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து அடக்குமுறையை பிரயோகித்து வருகிறது. அவர்களை சிறைக்கு அனுப்ப கொண்டு செல்லும் ஊடக வேட்டையை ஆரம்பித்துள்ளது. ஒரு போதும் நாங்கள் இதற்கு இடமளிக்கப் போவதில்லை. அதற்கு எதிராக நாம் போராடுவோம். அரசியலமைப்பை ஒரு முறை படிக்குமாறு அரசிடம் நாம் கேட்டுக் கொள்கிறோம். எந்த வகையிலான ஊடக அடக்குமுறைக்கு அல்லது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கு நாங்கள் எதிராவோம். அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை அரசு மீறுகிறது" என காரசாரமாக விமர்சனம் செய்தார். 

 #பட்ஜெட் பற்றிய எதிர்க் கட்சிக் கூட்டம்
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 
நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி சமரதுங்க உட்பட அறிஞர் குழாம் ஒன்று வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்தனர். "இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கு உணரத்தக்க எந்த சலுகையையும் அரசு வழங்கவில்லை" என கலந்துரையாடலை ஆரம்பித்தார் இரான் எம்பி. 
 "அரசு நாம் பெற்றுக்கொண்ட கடன்கள் குறித்து பேசுகிறது. நாம் ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொண்டதை விட அதிகமாக கடந்த ஆண்டில் கடன் பெறப்பட்டுள்ளது" என்று அசோக் எம்பி கூறினார். 
 "இந்த அரசாங்கம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேலை செய்கிறது. வெளிநாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை ஒரு வீத தண்டப் பணத்தை செலுத்தி நாட்டிற்குள் கொண்டு வர வரவு செலவுத் திட்டத்தினுடாகவே முன் மொழியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இவ்வாறான கறுப்புப் பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அனுமதிக்கும் உத்தியோகபூர்வ ஆவணம் முன்வைக்கப்பட்டுள்ளது" என்று விளக்கினார் கலாநிதி ஹர்ஷ எம்பி. இதே நேரம் சஜித் பொருளாதார விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் விளக்கங்கள் கோரி தெளிவு பெற்றுக்கொண்டார். 

 #அனுர குமாரவின் பாராளுமன்ற உரை
பாராளுமன்றத்தில் எப்போதுமே சிறப்பான உரைகளை ஆற்றுபவர் ஜேவிபி தலைவர் அனுர. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து காத்திரமான உரையொன்றை ஆற்றியிருந்தார். 
குறிப்பாக இலங்கை 5 விதமான பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாக உதாரணங்களுடன் விளக்கிய அவர் சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகள் பின்பற்றிய தவறான பொருளாதார கொள்கை காரணமாக நாடு இந்நிலையை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். 
 1974 ல் இலங்கையிலும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நாணயத் தாள்களை பாவனையில் இருந்து அகற்றி கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தது போல் அல்லாமல் 1 வீத தண்டம் செலுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். 
அத்துடன் கடன், தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகிய இரண்டும் தவிர வேறு அரசிற்கு மார்க்கங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மொத்த தேசிய உற்பத்தியின் விகிதமாக அரச வருமானத்தின் விகிதத்தை சுட்டிக்காட்டிய அனுர எம்பி வலயத்தில் ஏனைய நாடுகள் மற்றும் உலகின் பல நாடுகளோடு ஒப்பிட்டதுடன் இலங்கை எந்தளவு பின்தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். 
அத்துடன் மொத்த அரச செலவினத்தில் 28% மட்டுமே அரசின் வருமானங்கள் என்றும் இதற்கான தீர்வுகள் அரசிடம் இல்லையென்றும் கூறினார். புகழ் பெற்ற டைட்டானிக் விபத்தின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை கூறி அவர் உரையை நிறைவு செய்தார். "பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கடலில் மூழ்க சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் சென்றது. அந்த இரண்டரை மணித்தியாளங்களும் கப்பலில் இருந்த வாத்தியக் குழுவினர் இசைத்துக் கொண்டே இருந்தனர். அவ்வாறே இலங்கையும் கடன் என்ற கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் உரையை நிறைவு செய்தார். 

 #ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய யாப்பு
எங்கள் தேசிய முன்னணி என்ற கட்சியை வாங்கியே ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. இதன் யாப்பு எங்கள் தேசிய முன்னணியின் யாப்பாகவே இருந்தது. கட்சியின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு யாப்பை திருத்தி புது யாப்பு ஒன்றை உருவாக்க செயலாளர் ரஞ்சித் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழு ஆரம்ப கட்ட யாப்பு முன்மொழிவை தயாரித்து முடிந்துள்ளது. இதனை கட்சி மேலிடத்திற்கு வழங்கி அவர்களின் ஆலோசனையின் பின்னர் பூரணப்படுத்தப்படும். 
SJB இற்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனவரி மாதம் ஆரம்பிக்க கட்சி தீர்மானித்துள்ளது. 

 #கொழும்பில் தரித்த ருவன்
பிரயாண கட்டுப்பாடுகள் காரணமாக இவ்வாரம் ஐதேக பிரதித் தலைவர் ருவன் பெரும்பாலும் கொழும்பிலேயே தங்கியிருந்தார். எனினும் அவருக்கு ஓய்வு கிடைக்கவில்லை. கம்பஹா மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் பலர் தொலைபேசி வாயிலாக தமது குறைபாடுகளை முன்வைத்தனர். 
5000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்கும் சிரமங்களை பல குறிப்பிட்டனர். அவற்றை பொறுமையாக கேட்ட ருவன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். 

 #பாடசாலை மீள ஆரம்பம்
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தமையைத் தொடர்ந்து அது தொடர்பான வாத விவாதங்கள் சூடு பிடித்தன. 
தற்போதைய நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளை மையப்படுத்தி புதிய கொத்தணி ஒன்று உருவானால் பொறுப்பேற்பது யார் என்ற தொனியில் கல்வி சார் தொழிற்சங்கங்கள் கருத்து தெரிவித்தன. பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து செய்யும் வாகன உரிமையாளர் சங்கமும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. 
இவை இவ்வார நடவடிக்கைகளே. அடுத்த வாரம் புதிய தலைப்புகள் சூடு பிடிக்கலாம். ஏனைய தலைப்புகளை மிஞ்சி கொரோனா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கலாம். பாடசாலை ஆரம்பித்தல் விவகாரம், வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் போன்ற தலைப்புகள் பேசப்படலாம். 
- fபயாஸ் MA fபரீட்.
அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: அரசியல் களத்தில் திரைக்கு அப்பால்... - சமகால அரசியல் நோக்கு: Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா?

November 22, 2020

அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று (21. 11.2020) இரவு 8.00 மணிக்கு நடாத்திய (zoom Meeting) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது. 
அதாவது அரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
எனவே, எந்தவொரு அரபுக் கல்லூரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? அரபுக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது உண்மையா? Reviewed by irumbuthirai on November 22, 2020 Rating: 5

மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்...

November 21, 2020

மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படுவதுடன் அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் மத்ரஸா பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டது. 
இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார். 
மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... மத்ரஸாக்களில் கற்பிக்க இலங்கை வருவோர் பற்றி அமைச்சர் G.L. பீரிஸ்... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை...

November 21, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 47ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அறிவிப்பு. 
  • கொவிட்19 தொற்றுகாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயும் மகனும் நேற்றிரவு தப்பி சென்றுள்ளதாக தேசிய கொவிட்19 தடுப்புக்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த 02 பேரும் எஹெலியகொட பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேவேளை தாயுடன் தப்பிச் சென்ற சிறுவன், எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார். தாய் தொடர்ந்தும் தேடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 
  • இங்கிலாந்து செல்லும் இலங்கையர்கள் அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • வடமேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படமாட்டாது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்த இடங்களுக்கு பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் ஒரு வாரத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
  • மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று (20) காலை 6 மணிமுதல் முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்பட்டது. 
  • நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) நாட்டின் எந்த பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
  • ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது. 
  • சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது எழுந்தமானமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல மாறாக பாடசாலைகளின் அதிபர்கள் அதிபர்கள், சிரேஸ்ட ஆசிரியர்கள் மற்றும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடியே தீர்மானித்ததாக தெரிவித்தார். 
  • பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன. 
  • கொரோனா 2வது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு. 
  • வாகன அனுமதிப்பத்திரம் பெறவுள்ள நபர்கள் தமது மருத்துவ சான்றிதழை பெற்றுக்கொள்ள E-Channel இணையத்தள சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,280 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 20-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது...

November 21, 2020

வார இறுதியில் அதாவது, இன்று(21) மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. பெர்னான்டோ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... வார இறுதியில் பயணிகள் ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது... Reviewed by irumbuthirai on November 21, 2020 Rating: 5

மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு...

November 20, 2020

4G இணையத் தொடர்பின் ஊடாக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 02 வாரங்களுக்குள் கெலின்கந்த பிரதேசத்திற்கும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் தொடர்பாடல் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பதுரெலிய கெலின்கந்த பிரதேசத்தில் இணையதள தொடர்பாடல் சிக்கல் காணப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து பார்பார்வையிட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்படும் 4G வலையமைப்பு... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்...

November 20, 2020

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது ஜும்ஆத் தொழுகைக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார், இம்ரான் மஹ்ரூப், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம், ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோர் ஒப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளனர். 
சகல முஸ்லிம்களும் வெள்ளிக்கிழமை தினத்தில், ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டியது சமய ரீதியான கடமையொன்று என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். 
இதனடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்ளும் பொருட்டு நேர ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இதுவரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதை தாங்கள் கவனத்தில் கொண்டு எதிர் காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போதும், முஸ்லிம் உறுப்பினர்கள் ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஜப்னாமுஸ்லிம்.
ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... ஜும்ஆ தொழுகைக்கு நேரம் கேட்ட MP க்கள்... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை...

November 20, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 46ம் நாள் அதாவது வியாழக்கிழமை (19) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கே இவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • கடந்த 13 ஆம் திகதி பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட நபரொருவர் மாதாம்பாகம கலகொட புதிய கொலனி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தீபாவளி விடுமுறையில் மஸ்கெலியா பிரதேசத்திற்கு சென்ற இருவருக்கும் மற்றும் கொட்டகலை பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் ஊழியர்கள் உள்ளிட்ட 57 பேர் தங்கியுள்ள விடுதியொன்றில் 17 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹிரு பெரேரா தெரிவித்தார். 
  • மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • Covid-19 காரணமாக கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை கையாளும் நடவடிக்கைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமையை தவிர்த்து உரிய வகையில் ஊழியர் முகாமைத்துவத்தை மேற்கொண்டு கொள்கலன் செயற்பாட்டு நடவடிக்கைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். 
  • ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. 
  • கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாளை(20) முதல் விஷேட அம்பியுலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422 558 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. 
  • போகம்பறை சிறையிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கும் தப்பி செல்ல முயற்சித்த போது மரணித்த கைதிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 
  • ஆளில்லா விமான கருவிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • வீட்டில் இருக்கின்ற முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்வாய்ப்பட்டவர்கள், ஏதேனும் அசௌகரியங்களுக்கு உட்படுவார்களாக இருந்தால், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். 
  • தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாணந்துறை - தொடவத்தை பகுதியில் நடத்தி செல்லப்பட்ட தனியார் வகுப்பினது ஆசிரியர் காவற்துறையினால் கைது. இந்தநிலையில், அந்த வகுப்பில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களும் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • நாட்டில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 439 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,841 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 19-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 20, 2020 Rating: 5

உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

November 19, 2020

அரசாங்க, அரை அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களை சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை அழைத்து செல்வதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இந்த சேவையை பெற எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து Online மூலமாக கிழுள்ள மின்னஞ்சலுக்கு, வட்ஸ்அப் இலகத்திற்கு அல்லது தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்ப முடியும். 

இணையத்தளம் - www.ntc.gov.lk 
மின்னஞ்சல் - staffservices@ntc.gov.lk 
வட்ச் எப் இல - 0704361101 
தொலை நகல் - 0112503725 
மேலதிக விபரங்களுக்கு 1955 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும்.
உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... உங்கள் நிறுவன ஊழியர்களை சுகாதார முறைப்படி அழைத்து வர வேண்டுமா? தயாராகிறது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை...

November 19, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 45ம் நாள் அதாவது புதன்கிழமை (18) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • நேற்று (17) நள்ளிரவு ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பழைய 
  • போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 கைதிகள் நேற்றிரவு தப்பி செல்ல முயற்சித்த போது 3 பேர் கைது, ஏனையவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், மற்றைய நபர் மரணித்துள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர் 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா தொற்றுக்குள்ளான பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 628 பொலிஸ் அதிகாரிகளும் 197 பொலிஸ் விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கொவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்திற்கு முன்னாள் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பிராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
  • குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார். 
  • கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தலாவைக்கு சென்ற இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 
  • 30 வருடகால யுத்தத்தை விடவும் கொரோனா வைரஸ் பரவலானது அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர், களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார். 
  • கொரோனாவின் முதல் அலையை மிக விரைவாக கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் வெற்றி உலக சுகாதார தாபனத்தினால் கூட பாராட்டப்பட்டது. இருப்பினும், மக்களைப் பாதுகாக்க நாட்டை சுமார் இரண்டு மாதங்களுக்கு முற்றிலுமாக மூட வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வருமானத்தை இழந்த 59 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டது. கடினமான காலங்களில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க வரி நிவாரணம் வழங்கப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறிதல், தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தல், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நலன்பேணல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை ரூ. 70,000 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது. கோவிட்டின் இரண்டாவது அலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. நோய்த் தொற்றுடையவர்கள் என்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை 0.05% க்கும் குறைந்தளவில் பேண எமது சுகாதாரத் துறைக்கு முடியுமாகியுள்ளது. என்று தான் பதவியேற்று ஓராண்டு நிறைவுக்காக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜனாதிபதி தெரிவித்தார். 
  • மேலும் 3 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். 2) கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண். 3) கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. 
  • இன்றைய தினம் மாத்திரம் 327 பேருக்கு கொரோனா உறுதியானது. அந்தவகையில் இலங்கையின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,402 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 18-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 19, 2020 Rating: 5

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்...

November 18, 2020

நாட்டின் 75வது வரவுசெலவு திட்டத்தை நேற்றையதினம் (17) நிதி அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் முன்வைத்தார். 
அதன் முக்கிய அம்சங்கள் சுருக்கமாக... 

  • 5.5% பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக, இறக்குமதியை மையப்படுத்திய பொருளாதாரத்துக்கு பதிலாக உற்பத்தியை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என பிரதமர் குறிப்பிட்டார். 
  • கிராமிய அபிவிருத்தி ஊடாக வறுமை ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 
  • 2021 ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை முன்மொழிவு. இதை செலுத்த முடியாத தோட்டக் நிறுவனங்களுடான முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
  • பெருந்தோட்டத்துறையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு. 
  • ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தியும் சிறிய தேயிலை தோட்ட உற்பத்திகளிலிருந்து அதிகரித்துள்ள அதேவேளையில், பாரிய அளவிலான பெருந்தோட்டங்களின் பங்களிப்பு சுமார் 25% ஆல் குறைவடைந்துள்ளது.  வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ள தோட்ட கம்பெனிகளை ஊக்குவிப்பதற்கும், திருப்தியடைய முடியாத தோட்ட கம்பெனிகளின் தனியார் மயப்படுத்தல் ஒப்பந்தத்தை மீண்டும் மீளாய்வு செய்து வர்த்தக ரீதியில் அபிவிருத்தி செய்யக்கூடிய மாற்று முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
  • பாதீட்டில் விசேட பொருட்கள் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த யோசனை. 
  • விவசாயம், கால்நடைவளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைகளின் வருமான வரியை 05 வருடங்களுக்கு நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 
  • 2021 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 50% வருமான வரி சலுகை. 
  • Covid-19 பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு, விசேட காப்புறுதி திட்டம். 
  • பெருந்தோட்டத்துறை தேயிலைச் செய்கைக்காக புதிய தொழில்நுட்ப முறை மற்றும் காலநிலை தாக்கத்தினைக் குறைக்கின்ற சேதன பசளை பாவனையினை பிரபல்யப்படுத்தல் என்பவற்றின்பால் விசேட கவனம் செலுத்தப்படும். 
  • சிறிய இறப்பர் தோட்டங்களின் வருமான வழிகளை பன்முகப்படுத்தல் மற்றும் இயற்கை இறப்பர் தொடர்பான கைத்தொழில்களின் மூலம் அத்துறையின் வருமானத்தினை அதிகரிக்க முடியுமாகவிருக்கும். 
  • தெங்கு காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக அந்த காணிகளில் அகழிகள் மற்றும் நீர்ப் பாதுகாப்பு முறைகள், சொட்டு நீர்ப்பாசன உபாயங்களைப் போன்று பசளைகளை இடுவதற்கும் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் தென்னை மற்றும் இளநீர் செய்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 
  • வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையிலுள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்ற அந்நியச் செலாவணி சதாரண செலாவணி வீதாசாரத்திலும் பார்க்க ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் செலுத்துதல் 
  • தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் வரை அதிகரிப்பு 
  • மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு முற்றாக தடை. 
  • மதுபானம், சிகரட், வாகனங்கள், சூதாட்டம், தொலைபேசி சேவைகளுக்கு புதிய விசேட வர்த்தக பொருட்கள் வரி. 
  • திரிபோஷா உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேலதிகமாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 
  • மாணவர்களுக்கு தொலைக்காட்சியின் ஊடாக கற்பிப்பதற்காக நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி. 
  • நெற்செய்கைக்காக உரத்தை இலவசமாக வழங்கவும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 1,500 ரூபா பெறுமதியான உரத்தை வழங்கவும் திட்டம். 
  • பால் மா இறக்மதிக்கு பதிலாக உள்நாட்டு பால்மாவை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை. 
  • வெளிநாடு செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு இரண்டு வருட விடுமுறை. 
  • அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒற்றை பயன்பாட்டு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கு தடை. 
  • குருணாகல், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹரயில் இருந்து தம்புள்ளை வரையிலான பகுதி விரைவைில் அமைக்கப்படவுள்ளது. 
  • வணிகச் சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பாக 10 நிபுணத்துவ ஆலோசகர் அணிகளிடமிருந்து பெறப்பட்ட பங்களிப்புகளுடன் 60 சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள். 
  • சமூக பாதுகாப்புக்காக ரூபா 2,500 மில்லியன் மேலதிக ஒதுக்கீடு. 
  • சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையை பாதுகாத்தல், நாட்டின் மீன் வளத்தை பாதுகாப்பதற்காக கடற்படையை வலுவூட்டுதல், இராணுவம் மற்றும் விமான படைக்கு வசதிகளை செய்வதற்காக 20,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 
  • உள்நாட்டு உற்பத்திக்கான விவசாய பதாரத்தங்கள் தவிர்ந்த ஏனைய விசாய பொருட்களை இறக்குமதியின்போது விசேட இறக்குமதி வரி. 
  • உள்நாட்டு கித்துள் மற்றும் பனைக் கைத்தொழிலினை பல் வகைப்படுத்துவதன் மூலம் குறித்த உற்பத்தியினை ஏற்றுமதிச் சந்தையை நோக்கி அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்.
  • கந்தளாய், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் கரும்பு செய்கையாளர்களுக்கு அதிக வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கரும்பு செய்கையினை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
  • இலங்கை சீனி நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவினை 70 ஆயிரம் மெற்றிக் டன்;களாக அதிகரிப்பதற்கு சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நவீன மயப்படுத்தல், எதனோல் மற்றும் அது தொடர்பான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக வடிசாலைகளை நவீனமயப்படுத்துவதற்கும் திட்டம்.
  • கறுவா ஏற்றுமதி, பயிர்ச் செய்கை மற்றும் செயன்முறைப்படுத்தல் வலயங்களை தாபிப்பதனை நோக்காகக் கொண்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின்கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை விரிவாக்குவதற்கும் ஒதுக்கீடுகள். 
  • இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 6,500 ஏக்கர்களில் மரமுந்திரிகையை பயிரிடல்.
  • அரச பணியாளர்களுக்கு வீட்டுக்கடன் மற்றும் சொத்து கடன்களுக்கான உட்சபட்ச வட்டி 7% மாக குறைக்கப்படுகிறது. 
  • அரச பணியில் உள்ள ஆண் பெண் இருபாலாருக்குமான ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு. 
  • மத்திய வங்கியின் வங்கியல்லா கண்காணிப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டு புதிய கட்டமைப்பு அமுலக்கப்படும். 
  • 25 மில்லியன் ரூபா முதலீடு செய்யும் பாலுற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்காக 5 வருட மூலோபாய வரிவிலக்கு, 
  • இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு 3 ஆண்டுகளாக வரி விலக்கு.
  • கொவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரங்களுக்கு விசேட காப்புறுதி திட்டம்.
  • இறக்குமதி செய்யப்படுகின்ற வாகன உதிரிப்பாகங்களுக்கான வரியும் நீக்கம்.
  • எதிரிசிங்ஹ ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக குறித்த நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
  • 2021 ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 1,886 பில்லியன் ரூபாவாகும் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 3,441 பில்லியன் ரூபா. வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான துண்டுவிழும் தொகை ஆயிரத்து 555 பில்லியன் ரூபாவாகும்.
  • Irumbuthirainews
நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... நாட்டின் 75வது வரவுசெலவு திட்டம்... ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை...

November 18, 2020

Drone கருவிகள் ஊடான கண்காணிப்பின் மூலம், நேற்றும் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆளில்லா ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் வெற்றியளித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.
வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... வெற்றியளிக்கும் ட்ரோன் நடவடிக்கை... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்...

November 18, 2020

சுமார் 20 - 30 நிமிடங்களில் கொரோனாவை அறியக்கூடிய துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று (18) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் தெரிவித்தார். 
இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். வைத்தியசாலைகளுக்கு வரும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளை உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5
Powered by Blogger.